Thursday, December 27, 2007

சென்னை புத்தகக் காட்சியி்ல் எனி இந்தியன் பதிப்பகத்தி்ன் அரங்கு

அரங்கு எண்: 5 - சென்னை புத்தகக் காட்சியில் எனி இந்தியன் பதிப்பகத்தின் புத்தகங்கள் கிடைக்கும்.

Thursday, December 6, 2007

வெளி ரங்கராஜனின் வெளி இதழ்த் தொகுப்பு

இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி நாடக இதழ். நவீன நாடகங்களின் கூறுகளை நம் பாரம்பரிய நிகழ் மரபிலிருந்தும் தெருக்கூத்துகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உள்வாங்கி புதிய பரிமாணத்தை, புதிய உலகை சிருஷ்டிக்கமுடியும் என்கிற உண்மையை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலத்திற்கு வெளியான இந்த வெளி இதழ்கள் தமிழ் உலகிற்கு உணர்த்தின. வெளி ரங்கராஜன், சே.ராமானுஜம், ந.முத்துசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு நாடகக் கலைஞர்களும் வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வெளி இதழில் தொடர்ந்து தீவிர பங்காற்றினர். இந்த இதழ்களில் வெளி வந்த சிறப்பான பகுதிகளை கட்டுரைகள், நாடகங்கள், பேட்டிகள் என்கிற மூன்று பிரிவில் வெளி ரங்கராஜன் தொகுத்திருக்கிறார்.

ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.




கோபால் ராஜாராம் தனது முன்னுரையில் "தமிழில் சீரிய கலாசார முயற்சிகள் எல்லாமே சிறு பத்திரிகை இயக்கத்தினரால் தான் மேற்கொள்ளப்பட்டது. நாடக முயற்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் தொடர்ச்சிதான் ரங்கராஜன் மேற்கொண்ட "நாடக வெளி" பத்திரிகை வெளியீடு. இதன் பக்கங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவெங்கிலும் நிகழ்ந்த முக்கிய நாடக நிகழ்வுகளும், உலக நாடக இயக்கத்தின் முக்கிய போக்குகளும் பதிவு பெற்றன. பல நாடகப் பிரதிகள் வெளியாயின. தமிழில் வெளிவந்த முக்கிய நாடகங்களின் வரலாற்றுப் பதிவாக பட்டியல் வெளியாயிற்று. நாடக ஆளுமைகள் பற்றிய அறிமுகங்களும், விமர்சனங்களும் வெளியாயின. இந்தத் தொகுப்பு "நாடக வெளி"யின் சாரமான படைப்புகளை உள்ளடக்கியது. ரசனைக்கும் ஆய்வுக்கும் உரித்தாகவேண்டிய இந்தத் தொகுப்பு" என்கிறார்.


வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)

தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் - பக்கங்கள்: 320 - விலை: 160

பாவண்ணன் எழுதிய நதியின் கரையில்

புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.


எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடையத் துடிக்கும் அழகான மனநிலைகளை படம் பிடிக்கின்றன பாவண்ணனின் எழுத்துகள். எளிமை என்றுமே இயல்பானது, அதனால் என்றுமே அழகானது என்கிற அடிப்படையில் சுழலும் பாவண்ணனின் உலகம், மனம் விம்மும் பெரும் சோகத்தைக் கூட இதே சூத்திரத்தில் முன்வைக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு கைக்கூடும் இந்தப் புள்ளி அவன் எழுத்தின் உச்சம் எனலாம். பாவண்ணன் மிக எளிதாக இந்த உச்சத்தில் சென்று அமர்கிறார். தான் கண்ட காட்சியை விவரித்துக்கொண்டே வரும் பாவண்ணன், ஒரு கட்டத்தில் அதை தான் ரசித்த கவிதைக்கு விளக்கமாகவும் அல்லது விமர்சனமாகவும் மாற்றும் கட்டத்தில், அந்த நிமிடம், அக்கட்டுரை காட்சியை விவரிக்கிற எழுத்து என்கிற தளத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கியத் திறப்புக் கொள்கிறது. இதை இயல்பாகச் செய்துவிடுவதுதான் இக்கட்டுரைகளின் கூடுதல் பலம். அழகியல் மனநிலைகளை படம்பிடிக்கும் இக்கட்டுரைகள் வாழ்வியல் அனுபவமாகவும் விரிகின்றன.




கோ.ராஜாராம் தன் பதிப்புரையில், "பாவண்ணன் 'திண்ணை' வலையேட்டில் சிறுகதை ரசனைத் தொடர் ஒன்றை எழுதி வந்தார். சிறுகதைகளை உருவம் , உள்ளடக்கம், நடை, மொழி என்றெல்லாம் பார்க்கிற பார்வையைத் தாண்டி, வாழ்வியல் அனுபவப் பதிவுடன் கதை அனுபவத்தை ஒப்பிட்டு அவர் எழுதிய தொடர் முன்மாதிரியில்லாத இலக்கிய வெளிப்பாடு. அதனைப் படித்த போது அவருடைய அனுபவவிரிவு எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. எப்படி இப்படிப் பரந்த தளத்தில் அவர் நுண்ணியதாய்த் தான் கண்டதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று வியந்திருக்கிறேன், உள்வாங்கிய தன் அனுபவக் கூறை வாசக அனுபவமாய் மாற்றும் அளவிற்கு திறமையான, ஆனால் எளிமையான சொல்முறையும் அவருக்கு வாய்த்திருக்கிறது. இந்தத் தொகுப்பில் சுதந்திரப் போக்கில் அவர் கண்டதும் கேட்டதும் பதிவாகியுள்ளன. நாம் அனைவருமே கண்களையும், காதுகளையும், அவற்றைக் காட்டிலும் முக்கியமாக, மனத்தையும் திறந்து வைத்திருந்தால் பாவண்ணனின் அனுபவங்கள் நமக்கும் சாத்தியமானவையே" என்கிறார்.

நதியின் கரையில் (கட்டுரைகள்) - ஆசிரியர்: பாவண்ணன் - பக்கங்கள்: 144 - விலை: 70

வாஸந்தி கட்டுரைகள்

இந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை "பெண்ணியக் கட்டுரை"களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். "பத்திரிகை தர்மம்" என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.



கோ.ராஜாராம் தன் பதிப்புரையில், "செய்திகளை மையமாய்க் கொண்ட ஒரு முக்கியமான தமிழ் ஏட்டின் ஆசிரியப் பொறுப்பில் இருந்து, பிற்காலத்தில் நடப்புகளை அலசும் கட்டுரையாளராய்ப் பரிணமித்திருக்கிற வாஸந்தியின் முக்கியமான தொகுப்பு இது. இதன் பக்கங்களில் இன்றைய அரசியல் சமூகச்சூழ்நிலை பற்றிய பெரும் அவநம்பிக்கையும், கவலையும் இருப்பதாய் முதல் பார்வையில் தோன்றினாலும், நம்பிக்கையே இதன் ஆணிவேர். காரணம் - வாஸந்தியின் பாரபட்சமில்லாத தன்மை. இன்று இந்தியாவில் சுதந்திரமான குரல் என்று ஒன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்திருக்க வேண்டிய பத்திரிகை உலகம், தம்முடைய சார்புகளுக்கு ஏற்ப செய்திகளைத் திரித்து வெளியிடுவதையும், வேண்டிய நபர்களை சரியான கோணத்தில் காட்டுவதும், வேண்டாத நபர்களை தவறாகக் காட்டுவதும் வழக்கமாகவே கொண்டுவிட்டது. ஆனால் வாஸந்தி தன் சார்பின்மையை அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் அவர் எதிரொலிக்கிறார்" என்கிறார்.

வாஸந்தி கட்டுரைகள் - பக்கங்கள்: 240 - விலை: 120

உயிர்த்தலம் - ஆபிதீன்

உயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு

ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.


அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும் கேள்விக்கும் ஆய்விற்கும் தர்க்கத்திற்கும் உள்ளாகவேண்டிய பெரிய உலகத்தை திறந்து வைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் இந்த சமூகத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் தனது விமர்சன நிழலைப் பரப்பித் திரியும் இக்கதைகள், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் களத்திலும் செயல்பட்டு புதிய தேடலை சிருஷ்டித்துக்கொள்கின்றன. தான் இயங்கும், எதிர்கொள்ளும் சமூகத்தையும் சமூகத்தைச் சார்ந்த மனிதர்களையும் வெறுத்தோ அல்லது பதிலிறுக்கமுடியாத கேள்விக்குட்படுத்தியோ அவற்றிலிருந்து விலகாமல் அவற்றிற்குள்ளேயே உயர்ந்த பட்ச தேடலை, புதிய அலையை உருவாக்க முனைகின்றன ஆபிதீனின் எழுத்துகள். கதைகள் என்கிற இலக்கணத்தை உடைத்து கதைகளிலிருந்து கதைகளை நீக்கி, ஏற்கனவே கவனம் கொள்ளத் துவங்கியிருக்கும் புதிய மரபில் நான்கு கால் பாய்ச்சலில் செல்கின்றன இவரது கதைகள். 'கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை' என்பதன் மூலம் புனைவிற்கான வெளியை விரிவுபடுத்துவதிலும் பொதுமைப்படுத்துவதிலும் முக்கிய இடம் பெறுகின்றன 'உயிர்த்தலம்' தொகுப்பின் சிறுகதைகள்.



கோ.ராஜாராம் இதற்கு எழுதியுள்ள பதிப்புரையில், "ஆபிதீன் கதைகளைப் படிக்கையில் இரண்டு உணர்வுகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று : அவை சம்பிரதாயமான கதைகள் அல்ல. கதைகளின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்தால் அவை கதைகளே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். இன்னொன்று அபார நகைச்சுவை உணர்வு. சிறுகதைகளின் இலக்கணம், எடுப்பு, தொடுப்பு, சிக்கல், சிக்கலின் வளர்ச்சி, முடிவு என்று எந்தப் படிநிலையும் இல்லாமல், சரேர் என தொடங்கி, மனம் போன போக்கில், ஆனால் ஒரு திட்டத்துடன் நகர்ந்து மையப்புள்ளியை உருவாக்கிய நிமிடமே அதைச் சிதைத்து, மறு மையம் நோக்கிப் பாய்தல் என்று எல்லா இலக்கணங்களையும் மீறிய ஒர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன. சுவாரஸ்யம் இலக்கியச் சிறப்பிற்கு ஒவ்வாது என்ற அழுகுணி இலக்கணத்தையும் இவை மறுக்கின்றன. அவருடைய நகைச்சுவை அவருடைய தனித்த பார்வைக்குச் சான்று. நகைச்சுவை மூலம் சுற்றிலும் உள்ள அவலங்களையும், ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் அவர் சித்தரிக்கிறார் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் சிரிப்பு எழுந்த மறு வினாடியே மனதைப் பிசைகிற ஒரு துயரம் பெருக்கெடுக்கும் தருணங்கள் அவர் கதைகளில் உள்ளன. பிழைப்பிற்காக நாடு விட்டு நாடு வந்து, மனைவி மக்களைப் பிரிந்து உழலும் மனிதர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். உன்னதமும் மலினமும் ஒன்றேபோல் பிணைந்து கிடக்கிற மனிதக் கூட்டம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு திணறும் உணர்வை இந்தக் கதைகள் ஏற்படுத்துகின்றன" என்கிறார்.


உயிர்த்தலம் (சிறுகதைகள்) - ஆசிரியர்: ஆபிதீன் - பக்கங்கள்: 256 - விலை: 130

உயிர் எழுத்து இதழில் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) பற்றிய விமர்சனம்

உயிர் எழுத்து டிசம்பர் 2007 இதழில் ஜெயமோகனின் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது. விமர்சனம் எழுதியிருப்பவர்: ந.முருகேச பாண்டியன்.


நன்றி: உயிர் எழுத்து


விசும்பு (அறிவியல் புனைகதைகள்) புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்: http://www.anyindian.com/product_info.php?products_id=104507

புதிய பார்வை இதழில் எனி இந்தியன் பதிப்பகத்தின் புதிய புத்தகங்கள் பற்றி...

எனி இந்தியன் பதிப்பகத்தின் புதிய புத்தகங்கள் பற்றிய செய்தி புதிய பார்வை (டிசம்பர் 01-15 2007) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


நன்றி: புதிய பார்வை